Wednesday, April 26, 2006

சக்திக் களஞ்சியம் சின்னபிள்ளை

பக்கத்தில் படத்தில் வெள்ளந்தியாக சிரிக்கும் சின்னபிள்ளை உண்மையிலேயே கல்வியின் கறைகூட படியாத கிராமத்துப் பெண்மணி. சாதனைப் பெண்டிர் பக்கத்தில் வருமளவிற்கு இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுவது இயல்பே.

சின்னபிள்ளை 1999ஆம் வருடம், இந்திய அரசால் சமூக முன்னேற்றத்திற்கு உதவிய பெண்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த விருதான ஸ்திரீ சக்தி விருதினைப் பெற்றிருக்கிறார்.
இந்திய அரசின் விருது பெறுவதெல்லாம் ஒரு பெரிய செய்தியா என்பவர்களுக்கு சின்னபிள்ளையின் கதையை அடியிலிருந்து சொன்னால் தான் புரியும்.

ஆறு சகோதர சகோதரியர் இருக்கும் ஏழைக் குடியானவர் வீட்டில் ஏழாவதாகப் பிறந்தார் சின்னபிள்ளை. பிறந்த சில நாட்களில் தாயை இழந்த சின்னபிள்ளை, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்னும் அந்தக் கால நியதிப்படி வயல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்

பதினெட்டு வயதில் சின்னபிள்ளைக்குக் கல்யாணம். கணவன் பெருமாளுக்கு மதுரைக்குப் பக்கத்தில், அழகர்கோயிலுக்கு அருகில் ஒரு குக்கிராமம், புளிச்சேரியில் வயல்வேலை.

புகுந்த இடத்திலும் தொடர்ந்தது ஒற்றுமை வறுமை. தன் சொந்த ஊரில் கூடப் பிறந்தவர்களுக்காக உழைத்த சின்னபிள்ளை, இப்போது தன் பிள்ளைகளுக்காக உழைக்க ஆரம்பித்தார்காலையிலும் மாலையிலும், பண்ணையார் வீட்டில் வேலை. மதியம் கணவனுடன் வயலில் விவசாயம்.

வானம் பார்த்த பூமியான புளிச்சேரியின் மக்கள் வானத்தை நம்பி வாழவில்லை. நிலச்சுவாந்தார்களையும் வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஈட்டிக்காரர்களையும் மட்டுமே நம்பி இருந்தன புளிச்சேரியின் விவசாயக் குடும்பங்கள். வயிற்றுக்கு உணவில்லாமல், சத்துணவுக்காக மட்டும் பள்ளிக்குச் சென்று வரும் பிள்ளைகள். நாள் முழுவதும் உழைத்தும், சாப்பிடும் அரிசிக்கே கடன் வாங்கி வட்டி கட்ட வைக்கும் போதும் போதாத கூலி.

அயராத உழைப்பாலும் அரவணைக்கும் பண்பாலும், சின்னபிள்ளை வெகு விரைவில் கூலி வேலை செய்யும் பெண்களின் கொத்துத் தலைவியானார். பொதுவுடைமை, தனிவுடைமை என்னும் சொற்களே தெரியாத போதும் சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணையாரைத் தட்டிக் கேட்கலானார் சின்னபிள்ளை. சின்னபிள்ளையின் குழுவில் வேலை செய்தால் சேரவேண்டிய கூலி கட்டாயம் கிடைக்கும் என்று பெண்கள் சின்னபிள்ளை அழைத்தால் ஓடிவரத் தயாராக இருந்தனர்.

பாடுபட்டு உழைக்கும் பெண்கள் வீட்டில் யாருக்காவது தலைவலி, காய்ச்சல் என்ற போதும் வட்டிக்குக் கடன் வாங்குவதையும் அதனால் அவர்கள் நாளுக்கு நாள் ஏழைகளாகிக் கொண்டே செல்வதையும் காணக் காணச் சின்னபிள்ளைக்குப் பொறுக்கவில்லை. இதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் புளிச்சேரிக்கு வந்தார் "தான்" (dhan) அமைப்பினைச் சேர்ந்த வாசிமலை.

வாசிமலை சொன்னதெல்லாம் சேமிப்பு மட்டும் தான். "நீங்கள் சம்பாதிக்கும் உங்கள் பணத்தின் முதல் செலவு சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும்" என்னும் நகரங்களில் பரவலாக இருந்த ஒரு கருத்தைத் தான் முன்வைத்தார். அதனைக் கூட ஏற்கத் தயாராக இல்லை அப்போது தான் சீட்டுக் கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்திருந்த புளிச்சேரிப் பெண்டிர்.

சின்னபிள்ளையின் உதவியோடு வாசிமலை மீண்டும் தனது பிரசாரத்தைப் பலமாகச் செய்தார். சின்னபிள்ளை சொன்ன ஒரே காரணத்துக்காக புளிச்சேரியின் முதல் சிறுசேமிப்பு அமைப்பு பத்துப் பெண்களின் 20 ரூபாய்களைக் கொண்டு தொடங்கியது. 'புள்ளுக்கருவூலம்' என்று பெயரிடப்பட்ட அந்த சிறுசேமிப்பு அமைப்பிலிருந்து, குழுவிலிருந்த பெண்களின் தேவைக்கு கடன் கொடுக்கத் தொடங்கினார்கள். 60 சதவிகித வட்டி. எனினும், மற்ற வட்டிக்கடைக்காரர்களை விட குறைவே.

கொஞ்சம் கொஞ்சமாக நூறு, ஐநூறாயிற்று; ஐநூறு ஆயிரமாயிற்று. ஆறே மாதத்தில், தம் சுய தேவையைக் கவனிக்கக் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லாது போயிற்று.

சின்னபிள்ளை இந்த அமைப்பை இத்துடன் விடவில்லை. மெல்ல மெல்ல தன் சொந்தகிராமத்திலேயே மேலும் பெண்களைச் சேர்த்து தனித் தனி களஞ்சியங்கள் கட்ட உதவி செய்தார். அதிக பெண்கள் சேரும் போது, கடன் கொடுக்கும் விதமும், சேர்ந்த பணத்தைப் நிர்வகிப்பதும் கடினமாக இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு களஞ்சியமும், அதிகபட்சம் இருபது பெண்களுடன் இயங்கத் தொடங்கியது.

தனித்தனி களஞ்சியங்களாக இருந்ததால், ஒரே கிராமத்தில் ஐந்து ஆறு களஞ்சியங்கள் கூட இருக்கத் தொடங்கியதும், 1993இல் இவற்றை ஒருங்கிணைத்து "வைகை வட்டாரக் களஞ்சிய மன்றம்" தொடங்கப்பட்டது. அல்லும் பகலும் களஞ்சியம் ஒன்றே கருத்தாக செயல்பட்ட சின்னபிள்ளை தான் இதற்குத் தலைவி. ஒருங்கிணைந்த அமைப்பு உருவானதும், வங்கிகள் கடன் கொடுக்க எந்தத் தயக்கமும் காட்டவில்லை. கனரா வங்கியின் கடனுதவியால் கடைகள், நிலம் வாங்குதல், கிணறு வெட்டல், வண்டி, வீடு வாங்குதல் என்று வளர்ச்சிப் பணிகள் கிராமங்களை நிறைக்கத் தொடங்கியது.

1996இல் டாடா நிறுவனத்தைக் கவர்ந்து அவர்தம் பொருளுதவி பெற்றபோதும் சரி, 1999இல் பிரதமர் வாஜ்பாயின் கையால் விருது பெற்றபோதும் சரி, சின்னபிள்ளை இதுதான் என் இலக்கு என்று நின்றுவிடவில்லை.

இன்று 4000 உறுப்பினருடன், 88 கிராமங்களில் விரிந்திருக்கும் களஞ்சியம் அமைப்பு இன்றைய மகளிர் சுய உதவிக் குழுக்களின் மிகப் பழமையான முன்னோடியாகும். ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் இன்று சின்னபிள்ளையைத் தம் மாநிலப் பெண்டிருக்கும் உதவி செய்ய அழைத்துக் கொண்டிருக்கின்றன.

ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் இன்னும் சின்ன பிள்ளை போல, உற்சாகத்தோடு மதுரையைச் சுற்றி உள்ள சிற்றூர்களில் சேமிப்பு, சுய உதவி, வங்கிக்கடன் என்னும் எல்லா பரிமாணத்தையும் எடுத்துச் சொல்லி, களஞ்சியங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் சின்னபிள்ளை. உண்மையிலேயே பாண்டிநாட்டு மகளிர் சக்தியாகத் தான் விளங்குகிறார் இந்த சின்னபிள்ளை.

Friday, April 21, 2006

பயம் என்பது பயனற்றது


1978. விஜயா பாங்க் அலுவலகம்.

"என்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. தனியாகத் தொழில் தொடங்குவதற்கு கடன் வேண்டும்"

நிமிர்ந்து பார்த்த சிப்பந்தி அதிர்ந்தார். எதிரே நின்றிருந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு இருபத்தி ஐந்து வயதுக்குள் தான் இருக்கும். எண்பதுகளில், தனியே தொழில் தொடங்க ஆண்களே தயங்கிய நேரம். இத்தனை சின்னப் பெண், எந்த நம்பிக்கையில் வந்து கேட்கிறாள்?!!

"என்ன தொழில்? சமையல் சம்பந்தப்பட்டதா? இல்லை ஏதேனும் ஆரம்ப நிலைப் பள்ளியா? " என்றார் அவர்

"இரண்டும் இல்லை. என்ஸைம்ஸ் எனப்படும் நுண்ணுயிர்களை வளர்க்கும் கலை."

அதெல்லாம் இந்தியாவிற்கு சரிப்பட்டு வருமா என்று வங்கி நிர்வாகத்திற்கு சந்தேகம். அதுவும் மிருகவியலில் பட்டம் பெற்று, பீர் முதலியவற்றைத் தயாரிக்கும் கலையை ஆஸ்திரேலியாவில் பயின்று வந்திருக்கும் இந்தச் சின்னப் பெண்ணால் என்ன செய்துவிட முடியும்?

கடன் மறுக்கப்பட்டதோடல்லாமல், "பெண்களால் இன்னது தான் செய்ய முடியும் என்று வரைமுறைகள் உள்ளது. இந்திய சமுதாயத்தில் உன் போன்ற தனியொரு பெண்ணால் எதுவும் செய்ய முடியாது. நீ படித்த படிப்புக்கு ஏற்றாற்போல் ஒரு வேலையைத் தேடிக் கொள்." என்ற இலவச அறிவுரையும் கிடைத்தது..

சராசரி பெண்ணாக இருந்தால், இத்துடன் பயந்து போய் அறிவுரையை ஏற்று வேறு வேலைக்குப் போய் இருப்பாள். ஆனால் கிரண் இதற்கெல்லாம் பயப்படுபவள் இல்லை.

"பயம் என்பது பயனற்றது. சமுதாயம் என்ன சொன்னாலும் நினைத்ததை நடத்தியே தீருவேன்" என்று நிமிர்ந்து நின்ற கிரண் மஜும்தார் ஷா இன்றைக்கு பெங்களூரின் மிகப் பெரிய பயோடெக் சாம்ராஜ்யத்தின் அரசி..

இந்தியாவில் தொழில் முனைவோருக்குக் கொடுக்கப்படும் எல்லாப் பரிசுகளையும் ஏற்கனவே பெற்று, போன ஆண்டு(2005) பத்மபூஷன் பட்டத்தையும் பெறுவதற்கு காரணம், கிரணின் அயராத உழைப்பும் ' நிலத்தில் யாருக்கும் அஞ்சாத' அவரது நெறிமுறைகளும் தான்.

விஜயா பாங்க் தர மறுத்த கடனை கனரா வங்கி மேலாளர் கிரணின் நீடித்த உழைப்பையும், அயராத முயற்சியையும் பார்த்துத் தந்தபோதும், சொந்த நாட்டுக்காரர்கள் வைக்காத நம்பிக்கையை அயர்லாந்து விஞ்ஞானி ஆச்சின்க்லாஸ் வைத்து கிரணின் யோசனையின் மீது தன் சொந்த பணத்தை முதலீடு செய்த போதும் அவை சின்ட்ரெல்லாவின் செருப்பு போல் அதிசயமாக நடந்து விடவில்லை.

எண்பதுகளில் சிறு தொழில் முனைவோர் சந்தித்த பிரச்சினைகள் முதலீட்டு மேம்பாட்டுடன் முடிந்து விடவில்லை. கிரணை அச்சுறுத்துவதற்காகவே வந்தது பணியாளர் பிரச்சினை. வேலைக்கு ஆள் எடுக்கத் தேர்வு வைத்தால், கிரண் கேள்வி கேட்டதைவிட, அவரையும் அவரது நிறுவனத்தைப் பற்றியும் கேட்டுவிட்டு, வேலை வேண்டாம் என்று சொன்னவர்கள் தான் அதிகம். இதற்காகவும் சோர்ந்து விடவில்லை கிரண்.

கெஞ்சலும் கொஞ்சலுமாகத் தன் நெருங்கிய தோழியைத் தன் உதவியாளராய்ச் சேர்த்தார். தன் தொழிலுக்குத் தேவையான படிப்பு படித்தவர்கள் கிடைக்காத போது, யார் வந்தாலும் வேலை கொடுத்தார், அவர்களை வைத்து வேலை செய்ய முயன்றார். படிப்பறிவில்லாத சில தொழிலாளர்கல், சங்கங்கள் தொடங்கி வேலை நிறுத்தம் செய்தபோதும் அயராது எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.

உழைப்பு, உழைப்பு மேலும் உழைப்பு. இதுவே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்ட கிரணுக்கு அடுத்த சோதனை அவரது அயர்லாந்து பங்குதாரர் ஆச்சின்க்லாஸால் வந்தது. அவர் தனது பங்குகளை யூனிலிவர் நிறுவனத்திற்கு விற்ற போது, மீண்டும் தன்னை நிரூபிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார் கிரண். எல்லா சோதனையையும் மீறி, 1997இல், யூனிலீவரின் பங்குகளையும் வாங்கி அயல்நாட்டு சார்பில்லாத நிறுவனமாக்கினார் கிரண்.

சவால்களை சமாளிப்பது மட்டுமே இல்லாமல், தன் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் எப்போதுமே முனைப்புடன் இருக்கும் கிரணின் பயோகான் நிறுவனம், 2004இல் பங்குச் சந்தையில் நாட்டின் முதல் பயோடெக் தொழிற்சாலையின் பங்குகளாக வெளிவந்தது. வெளிவந்த புதிய பங்கு என்னும் நிலையிலேயே 32 மடங்கு அதிகமான விலையில் வாங்க மக்கள் தயாராக இருந்தது தான் இந்த நிறுவனத்தின் நற்பெயருக்கு சான்று.

இந்த வெற்றி கிரண் மஜும்தாருக்கு ஒரே நாளில் வந்து விடவில்லை. அடுத்தது என்ன என்று யோசித்துக் கொண்டே இருக்கும் அவரது சுறுசுறுப்பும் ஆண்கள் சமுதாயத்தில் எதிர்த்து நிற்கும் துணிவும் தாய்நாட்டின் மீது அவருக்கு இருக்கும் அன்பும் தான் இந்த பெரிய வெற்றிக்குக் காரணம்.

இன்றும் தன் சாதனைகளின் மூலம் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும் கிரண் நமக்கு என்ன சொல்கிறார் தெரியுமா? "இன்றைய இளைஞர்களுக்கு ஆழ்ந்த அகன்ற தொலைநோக்குப் பார்வை வேண்டும். உங்கள் இலக்கு சிறியதாகவும் இருக்கலாம், பெரியதாகவும் இருக்கலாம்; அதை அடைய உங்கள் செயல்திட்டம் தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், அடையவேண்டும், அடைந்தே ஆக வேண்டும் என்னும் வெறியும் முழுமையான ஈடுபாடும் இருந்தால், வெற்றி உங்களைத் தாண்டிப் போகவே முடியாது".

Wednesday, April 19, 2006

புதுப் பதிவு, பூப் பதிவு..

இது ஒரு புதுப் பதிவுக்கூடம்.. பெண்களைப் பற்றி, வாழ்வில் ஜெயித்த பெண்களைப் பற்றிய பதிவுக்கூடம் இது.

அரசியலையும், சினிமாவையும் தவிர்த்து மற்ற துறைகளில் ஜெயித்த பெண்களின் வாழ்வு, போராட்டம், வெற்றி, அதற்காக அவர்கள் இழந்தவை, அவர்கள் எண்ணம், ஆக்கம், செயல் .. எல்லாவற்றையும் பேச வேண்டும் என்பது என் ஆசை..

அரசியல்வாதியும் சினிமாக்காரர்களும், சின்னத்திரை 'சாதனை'யாளர்களும் சுலபத்தில் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறார்கள். மற்ற துறையினரைப் பற்றித்தான் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.

படித்து நன்றாக இருப்பின்
தட்டிக் கொடுங்கள்..

யாரையேனும் நான் விட்டு விட்டால்,
யாரைப் பற்றியாவது தவறானவற்றை எழுதினால்,
ஆக்கப்பூர்வமான பாதையிலிருந்து கீழிறங்கினால்,
குட்டிக் கேளுங்கள்...!!!!